|
ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இருபுனலும் - 'கீழ் நீர்', 'மேல்நீர்' எனப்பட்ட தன்கண் நீரும்; வாய்ந்தமலையும் - வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும் - அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும் - அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்பு - நாட்டிற்கு அவயமாம்.(ஈண்டுப் புனல் என்றது துரவு கேணிகளும் ஏரிகளும்ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயமாதற்குரியன அவையேஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம் தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமைபற்றி 'வாய்ந்த மலை' என்றார். அரண் -ஆகுபெயர். இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மேல்நீர் கீழ்நீர் நிறுத்தலாமிடத்தினைக் கிணறுகல்லி நீருண்டாக்குமிடத்தினையும், பயன்படு மலையினையும், ஆறொழுகுமிடத்தினையும், வலிய அரணாகும் இடத்தினையும் கண்டு அவ்விடத்தை நாடாக்குக: அவை நாட்டிற்கு உறுப்பாதலால். இஃது இவை ஐந்துங்குறையாமல் வேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இருபுனலும் -மேல்நீர் கீழ்நீர் எனப்பட்ட இருவகை நீர்வளமும்; வாய்ந்த மலையும் - பலவகையிலும் பயன்படுவதற்கேற்றதாய் வாய்ந்த மலையும் வருபுனலும் - அதனின்று வரும் ஆறும்வல் அரணும் - இயற்கையுஞ் செயற்கையுமாகிய இருவகை வலிய அரணும்; நாட்டிற்கு உறுப்பு - சிறந்த நாட்டிற்குரிய உறுப்புக்களாம். நிலத்தின் மேலுள்ள ஆற்று நீரும் குளத்து (ஏரி) நீரும் மேல்நீர்; நிலத்தின் கீழுள்ள கிணற்று நீரும் துரவு நீரும் கீழ்நீர். துரவு பெருங்கிணறு. நாட்டிற்கு எல்லையாகவும் அரணாகவும் வளநிலையமாகவும் உதவும் மலையை 'வாய்ந்த மலை' என்றார். "அளக்க லாகா அளவும் பொருளும் துளக்க லாகா நிலையுந் தோற்றமும் வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே."
|
|
கலைஞர் உரை:
|
|
ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அந்த இயற்கை வளங்கள் பல:) மழைநீர், கிணற்று நீர் என்ற இருவகை நீர் வளமும் அவற்றிற்கு வாய்ப்புத் தரும் மலை வளமும், பலமான பாதுகாப்புக்களும் ஒரு நாட்டிற்குச் சிறப்பளிக்கும் அங்கங்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
கீழ்நீர், மேல்நீர் எனப்பட்ட நீரும், வாய்ப்பான மலையும், அதிலிருந்து வரும் நீரும், அழியாத அரணும் நாட்டிற்கு உறுப்புக்களாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மழை நீர், ஊற்று நீர் என நீர் நிலவளமும் காடுகளோ டமைந்த மலை வளமும், ஆற்றுப் புனல் வளமும் சிறந்த அரணும் நாட்டிற்கு உறுப்புகளாவன.
|
|
Translation
|
|
Waters from rains and springs, a mountain near, and waters thence;
These make a land, with fortress' sure defence.
|
|
Explanation
|
|
The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort.
|
|
Transliteration
|
|
Irupunalum Vaaindha Malaiyum Varupunalum
Vallaranum Naattirku Uruppu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|