Thirukural

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்கற்ற செலச்சொல்லா தார்.

அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
களன் அஞ்சிக் கற்ற செலச் சொல்லாதார் - அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் - உயிர் வாழ்கின்றாராயினும் உலகத்தாரால் எண்ணப்படாமையின் இறந்தாரோடு ஒப்பர்.(ஈண்டுக் 'களன்' என்றது ஆண்டிருந்தாரை. இவை ஐந்து பாட்டானும் அவைஅஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
உளராயினும் செத்தாரோடு ஒப்பார்: அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றதனை அதற்கு இசையச் சொல்லமாட்டாதார். இது செத்தாரோடு ஒப்பரென்றது. இவை ஐந்தும் அவையஞ்சுதலான் வருங்குற்றம்கூறின
தேவநேயப் பாவாணர் உரை:
கற்ற களன் அஞ்சிக் செலச்சொல்லாதார் - தாம் கற்றவற்றை அவைக்கஞ்சி அதற்கேற்பச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் -உடலோடு கூடியுள்ளாரெனினும் உயர்ந்தோர் கருத்தில் இறந்தாரோ டொப்பர். களம் என்பது அவையையும் அவையிருந்த இடத்தையுங் குறிக்கும். ஆதலால் "ஈண்டுக் களனென்றது ஆண்டிருந்தாரை" என்னும் பரிமேலழகர் கூற்று வேண்டியதில்லை. இவ்வைங்குறளாலும் அவையஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது. உறுப்பியலின் முதற்பகுதியான அமைச்சியல்( அதி. 64-73) முற்றும்.
கலைஞர் உரை:
தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆகையினால்) சபைக்கு அஞ்சித் தாம் கற்ற கல்வியைப் பிறருக்குப் பயனுண்டாகும்படி சொல்ல முடியாதவர்கள் இருந்தும் இல்லாததற்குச் சமானம்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அவை (சபை)க் களத்திற்குப் பயந்து தாம் கற்றவ ற்றை ஏற்கும்படியாகச் சொல்ல மாட்டாதார், உயிர் வாழ்கின்றார் என்றாலும் இறந்தவரொடு ஓட்பாவார்.
தமிழ்க்குழவி உரை:
அவை அச்சத்தால் தான் கற்றவற்றைச் சிறப்பாக எடுத்துரைக்க இயலாதார், அறிவுடையார் எனினும் இல்லாதவராகவே கருதப்படுவார்.
Translation
Who what they've learned, in penetrating words know not to say, The council fearing, though they live, as dead are they.
Explanation
Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.
Transliteration
Ulareninum Illaarotu Oppar Kalananjik Katra Selachchollaa Thaar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 730