|
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் - தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றசர்க்குச் சென்று சொல்ல உரியான்; வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் - தனக்கு வரும் ஏதத்திற் கஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய் சோர்ந்தும் சொல்லாத திண்மையை உடையான். (தாழ்வு சாதி தருமமன்மையின், 'வடு' என்றார். 'வாய்சோரா' எனக் காரியம் காரணத்துள் அடக்கப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தன்னரசன் சொல்லிவிட்ட மாற்றத்தைப் பகை யரசர்க்குச் சொல்லுமவன் தன்னரசனுக்கு வடுவாகுஞ் சொற்களை மறந்துஞ் சொல்லாத அஞ்சாமையையுடைய தூதனாவான்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் - தன் அரசன் சொல்லி விடுத்த செய்தியை வேற்றரசரிடம் சென்று கூறுபவன்; வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் - தனக்கு நேரக்கூடிய தீங்கிற்கு அஞ்சி வாய்தவறியும் தாழ்வான சொற்களைச் சொல்லாத திண்ணிய நெஞ்சனாயிருத்தல் வேண்டும். வடு-குற்றம். தாழ்வான சொற்களைச் சொல்லுதல் தன் தகுதிக் கேற்காத குற்றமாதலின், ' வடுமாற்றம்' என்றார். வாய் சோராமைக்கு ஏதுவான வன்கண் என்க.
|
|
கலைஞர் உரை:
|
|
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மேலும் தன்னுடைய அரசன்) சொல்லி யனுப்பிய சேதியை வேற்றரசர்களிடம் சொல்லும்போது குற்றமாக எதையும் வாய் தவறியும் சொல்லிவிடாத திடமுள்ளவனே நல்ல தூதன்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தன் அரசன் சொல்லிய வார்த்தைகளை வேற்று அரசர்களுக்குச் சொல்லுதற்கு உரியவன், தனக்கு வரும் குற்றத்திற்கு அஞ்சித் தாழ்வான வார்த்தைகளை வாய் சோர்ந்தும் சொல்லாத வலிமையுடையவனாவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தன் மன்னவன் கூறியவற்றை மாற்றுநாட்டு மன்னவர்க்கு கூறுகின்ற போது குற்றமுற்ற சொற்களை வாய் தவறியும் கூட பேசாத வல்லமையாளனே தூதுவன்.
|
|
Translation
|
|
His faltering lips must utter no unworthy thing,
Who stands, with steady eye, to speak the mandates of his king.
|
|
Explanation
|
|
He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).
|
|
Transliteration
|
|
Vitumaatram Vendharkku Uraippaan Vatumaatram
Vaaiseraa Vanka Navan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|