|
கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கற்று -நீதி நூல்களைக் கற்று; செலச்சொல்லி - தான் சென்ற கருமத்தைப் பகை வேந்தர் மனங்கொளச் சொல்லி; கண் அஞ்சான் - அவர் செயிர்த்து நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாது; காலத்தால் தக்கது அறிவது தூதாம் - காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க உபாயம் அறிவானே தூதனாவான். (அவ்வுபாயம் அறிதற் பொருட்டு நீதி நூற்கல்வியும், அதனானன்றிப் பிறிதொன்றான் முடியுங்காலம் வரின் அவ்வாறு முடிக்கவேணடுதலின் காலத்தால் தக்கது அறிதலும், இலக்கணமாயின.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தன்னரசன் சொன்ன மாற்றத்தைச் சொல்லுங்கால் பகையரசன் வெகுண்டானாயின் அது மாற்றுதற்காம் உபாயத்தைக் கற்று, எவ்விடத்தினும் அஞ்சுதலின்றி மகிழ்ச்சி வருமாறு இசையச் சொல்லி நாளோடே கூடச் செய்யத் தகுவன அறிந்து சொல்ல வல்லவன் தூதனாவான்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கற்று-அறநூல்களையும் அரசியல் நூல்களையுங் கற்று; கண் அஞ்சான்-பகையரசரின் சினப்பார்வைக்கு அஞ்சாது; செலச்சொல்லி-அவர் மனத்திற் பதியுமாறு செய்திகளைச் சொல்லி; காலத்தால் தக்கது அறிவது தூது ஆம்- காலத்திற் கேற்பத் தகுந்த வழிகளைக் கையாள் பவனே நல்ல தூதனாவன். நூற்கல்வி பயன்படாவிடத்துத் தன் மதிநுட்பத்தாலும் உலகியலறிவாலும் சமையத்திற் கேற்றவாறு தக்க வழிகளைக் கையாண்டு, வினைமுடிக்க வேண்டியிருத்தலின், 'தக்கதறிவதாந் தூது' என்றார். 'ஆம்' இங்கும் பிரித்துக் கூட்டப்பட்டது..
|
|
கலைஞர் உரை:
|
|
கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மேலும்) தூதாகப்போன இடத்திலுள்ள நிலைமையை அறிந்து யாரிடத்தும் அஞ்சாமல் சொல்லவேண்டியதைத் தெளிவாகச் சொல்லி, சமயோசிதமாக நடந்து கொள்ளத் தெரிந்தவனே நல்ல தூதன்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நீதி நூல்களைக் கற்று, தான் சென்ற காரியத்தை வேற்றரசன் மனங்கொள்ளச் சொல்லி அவர் கோபமாகப் பார்த்தால் அதற்குப் பயப்பட்டு விடாமல் காலத்தோடு பொருந்தச் செயல் முடிக்கவல்ல அறிவுடையவனே தூதனாவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கல்வியிற் சிறந்து பகைவர்தம் பார்வைக்கு அஞ்சாமல். சொல்ல வந்ததைச் சுருக்கமாகச் சொல்லி காலத்துக் கேற்றவாறு ஒழுகுபவனே தூதனாதல் வேண்டும்.
|
|
Translation
|
|
An envoy meet is he, well-learned, of fearless eye
Who speaks right home, prepared for each emergency.
|
|
Explanation
|
|
He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time.
|
|
Transliteration
|
|
Katrukkan Anjaan Selachchollik Kaalaththaal
Thakkadhu Arivadhaam Thoodhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|