Thirukural

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற.

ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - வினைசெய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற - அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா. (ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இல்வழிப் பயனிலவாகலின் 'பிற' என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை; அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா. மற்றவையென்றது கருவியும் உபாயமும்.
தேவநேயப் பாவாணர் உரை:
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்-வினை செய்வதில் திண்மை என்பது அதைச் செய்பவனின் மனத்திண்மையே; மற்றைய எல்லாம் பிற-அஃதல்லாத பிறவெல்லாம் அதைப்போன்ற திண்மையாகா. மற்றைய பிற வாவன குடி, படை, அரண், நட்பு என்பவற்றின் திண்மைகள். அவையும் வேண்டுமாயினும், செய்வானின் மனத்திண்மை யில்லாவிடத்து அவை பயன்படாவாதலின் 'மற்றையவெல்லாம் பிற' என்றார்.
கலைஞர் உரை:
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
காரிய உறுதி என்பது காரியத்தைச் செய்கிறவனுடைய மன உறுதிதான். மற்ற உறுதிகள் எல்லாம் அந்த உறுதிக்கு ஈடாகமாட்டா.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தொழில் செய்யும்போது திண்மையென்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியவனுடைய மனத்திண்மையே ஆகும்.அதுவல்லாத மற்றவை எல்லாம் திண்மையென்று சொல்லப்பட மாட்டாவாம்.
தமிழ்க்குழவி உரை:
மேற்கொண்ட பணியை திறம்படச் செய்து முடித்தல் என்பது ஒருவர் மன உறுதியைப் பொறுத்ததே. மற்றவை எல்லாம் பொருட்டன்று.
Translation
What men call 'power in action' know for 'power of mind' Externe to man all other aids you find.
Explanation
Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature.
Transliteration
Vinaiththitpam Enpadhu Oruvan Manaththitpam Matraiya Ellaam Pira

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 661