Thirukural

செயற்கை அற஧ந்தக் கடைத்தும் உலகத்துஇயற்கை அறிந்து செயல்.

நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
செயற்கை அறிந்தக்கடைத்தும் - நூல் நெறியான் வினை செய்யும் திறங்களை அறிந்த இடத்தும்; உலகத்து இயற்கை அறிந்து செயல் - அப்பொழுது நடக்கின்ற உலக இயற்கையை அறிந்து அதனோடு பொருந்தச் செய்க. (கடைத்தும் என்புழி 'து' பகுதிப்பொருள் விகுதி. 'நூல் நெறியே ஆயினும் உலக நெறியோடு பொருந்தாதன செய்யற்க, செய்யின் அது பழிக்கும்' என, இயற்கை அறிவால் பயன் கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
செயத்தகுவன அறிந்த விடத்தும் அது செய்யுங்கால் உலக நடை அறிந்து செய்க. உலகநடை அறிதலாவது அரசர் சீலமும் பரிவாரத்திலுள்ளார் நிலைமையும் அறிதல். இவை யறியாது செய்யிற் குற்றமாமென்றவாறு.
தேவநேயப் பாவாணர் உரை:
செயற்கை அறிந்தக் கடைத்தும் -நூலறிவால் வினை செய்யுந் திறங்களை அறிந்த விடத்தும்; உலகத்து இயற்கை அறிந்து செயல் - உலகியலை - அறிந்து அதனொடு பொருந்தச் செய்க. பலசெய்திகளில் உலகியலும் நூலியலும் வேறு பட்டிருப்பதால், உலகியலொடு பொருந்தாதவற்றைச் செய்யற்க; செய்யின் உலகம் பழிக்கும் என்பதாம். 'கடைத்து' என்பதில் 'து' முதனிலைப் பொருளீறு (பகுதிப்பொருள் விகுதி). "பள்ளிக் கணக்கு புள்ளிக் குதவாது." என்னும் பழமொழியும், "உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார்." (140) என்னுங் குறளும், இங்குக் கவனிக்கத் தக்கன
கலைஞர் உரை:
செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படி நூல் அறிவோடு மதிநுட்பம் என்கிற சுருதியும் யுக்தியும் ஒத்த பின்பும் அவை அனுபவத்துக்குப் பொருந்துமா என்பதையும் அறியவேண்டும்.) ஆராய்ந்து செய்யவேண்டியதை அறிந்துகொண்ட பின்னும் அப்போதுள்ள உலக நடைக்கு அக்காரியம் ஒத்துக்கொள்ளுமா என்பதையும் அறிந்து செய்யவேண்டும் (என்ற யோசனையுள்ளவனே மந்திரி.)
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நூல்வழிகளால் தொழில் செய்யும் திறங் களை அறிந்தபோதும், அவ்வப்போது நடக்கின்ற உலக இயற்கையினை அறிந்து அதனோடு பொருந்தச் செய்தல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
உலக நடைமுறைகளை அறிந்திருந்தபோதும் ஒருவன் இயற்கையின் இயக்க நிலைகளை அறிந்து அதற்கு ஏற்ப இசைவாகச் செயல்படவேண்டும்.
Translation
Though knowing all that books can teach, 'tis truest tact To follow common sense of men in act.
Explanation
Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly.
Transliteration
Seyarkai Arindhak Kataiththum Ulakaththu Iyarkai Arindhu Seyal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 637