Thirukural

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.

இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - தம் சிறுமை நோக்கி, நாம் இவ்வினைமுடித்தல் அருமையுடைத்து என்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும் - அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும். ('சிறுமை நோக்கி' என்பது பெருமை தரும் என்றதனானும், 'வினை முடித்தல்' என்பது அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர்; ஆகவே அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்: முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால். இது வினைசெய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - ஒரு வினை செய்யுமுன் தம்மைச்சிறியவராகக் கருதி அவ்வினை தம்மாற் செய்தற்கு அரிதென்று தளராமை வேண்டும் ; முயற்சி பெருமை தரும் - முயற்சியே அவ்வினையைச் செய்து முடித்தற் கேற்ற பெருமையைத் தமக்கு உண்டாக்கும் . சிறியவராகக் கருதி யென்பது பெருமை தரும் என்பதால் வருவிக்கப்பட்டது . வினை செய்தல் என்பது அதிகாரத்தால் வந்தது . விடா முயற்சியால் அரிய வினையும் எளியவினையாம் . ஆகவே , வினைமுடிப்பிற்கு ஏதுவாக மட்டு மன்றி அதன் விளைவாகவும் பெருமை உண்டாகுமென்பதாம்.
கலைஞர் உரை:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஒரு காரியம் செய்து அது கைகூடாவிட்டால்) அது செய்வதற்கு முடியாத காரியம் என்று தளர்ந்து விடாமல் இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
'இத்தொழில் செய்து முடிக்க அருமையானது' என்று எண்ணி மனம் தளராதிருத்தல் வேண்டும். அதனை முடித்தற்கேற்ற பெருமையினைத் தனக்கு முயற்சி உண்டாக்குவதாகும்.
தமிழ்க்குழவி உரை:
எந்தச் செயலையும் இது நம்மால் முடியுமா என்று மனம் தளராமை வேண்டும். விடாமுயற்சி வெற்றி வாய்ப்பை நல்கும்.
Translation
Say not, 'Tis hard', in weak, desponding hour, For strenuous effort gives prevailing power.
Explanation
Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it).
Transliteration
Arumai Utaiththendru Asaavaamai Ventum Perumai Muyarsi Tharum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 611