Thirukural

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் - குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும். (வெங்கோலன் என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒருபொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.)
மணக்குடவர் உரை:
அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலையுடையனாயின் அவன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்.
தேவநேயப் பாவாணர் உரை:
வெருவந்த செய்து ஒழுகும் வெம்கோலன் ஆயின் -அரசன் குடிகள் அஞ்சுதற் கேதுவான செயல்களைச் செய்து வாழுங் கொடுங்கோலனாயின், ஒருவந்தம் ஒல்லைக் கெடும் -உறுதியாக விரைந்து கெடுவான்.ஒரு வந்தம்-ஒரு தலை.
கலைஞர் உரை:
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சியமாக விரைவில் அழியும்.
சாலமன் பாப்பையா உரை:
குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படியின்றிக்) குடிகள் நடுங்கும்படியாகத் தண்டித்து ஆட்சிபுரியும் கொடுங்கோல் மன்னவன், நிச்சயமாக வெகு விரைவில் கெட்டுப்போவான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
குடிகள் மிகவும் அஞ்சுகின்ற செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாகிவிடில், அவ்வரசன் உறுதியாகக் கடிதல் கெடுவான்.
தமிழ்க்குழவி உரை:
குடிமக்கள் அஞ்சத் தக்க வகையில் கடுமையாக நடந்து கொள்ளும் கருணையற்ற மன்னவரின் ஆட்சி விரைவில் கெட்டொழியும்.
Translation
Where subjects dread of cruel wrongs endure, Ruin to unjust king is swift and sure.
Explanation
The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.
Transliteration
Veruvandha Seydhozhukum Vengola Naayin Oruvandham Ollaik Ketum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 563