|
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
துளி' இன்மை ஞாலத்திற்கு எற்று - மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும், அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு. (சிறப்புப்பற்றி 'துளி' என்பது மழைமேல் நின்றது. 'உயிர்' என்பது குடிகள்மேல் நின்றது.மேல் 'வான் நோக்கி வாழும்' என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது; அத்தன்மைத்து, அரசன் அருளிலனாதால் அவன் கீழ் வாழும் மக்கட்கு.
இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
துளியின்மை ஞாலத்திற்கு எற்று - மழையில்லாமை உலகத்திலுள்ள உயிர்கட்கு விளைக்கும் துன்பம் எத்தகையதோ ; அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அத்தகையதே அரசனின் அருளின்மை அவன் நாட்டு வாழும் குடிகட்கு விளைக்குந் துன்பமும் ஆகும்.
"வானோக்கி வாழு முலகெல்லாம்" என்னுங் குறள் (542) இங்கு எதிர்மறை முகத்தால் ஒரு புது வலிமை பெறக் கூறப்பட்டது . இலை யென்பது சிறப்பாக வாழையிலையைக் குறித்தல் போல், துளி யென்பது இங்கு மழைத்துளியைக் குறித்து மழையென்னும் பொருளில் ஆகுபெயராக நின்றது . உயிர் என்றது இங்குக் குடிகளை.
'ஞாலம்' ஆகுபெயர் . என்னது - எற்று . (என் + து ) . அன்னது - அற்று (அன் + து ) . ஏகாரம் தேற்றம்.
|
|
கலைஞர் உரை:
|
|
மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத
அரசினால் குடிமக்கள் தொல்லைப் படுவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(குடிகளைத் துன்புறுத்தாவிட்டாலும் குடிகளுடைய துன்பத்தில் அனுதாபம் காட்டாதிருப்பதும் கொடுங்கோன்மையைச் சார்ந்ததுதான்.) உலகத்துக்கு மழையில்லாமை எப்படியோ அப்படிப் பட்டதே அரசனுடைய அன்பில்லாமை குடிமக்களுக்கு.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மழை இல்லாமையானது உலகில் வாழும் உயிர்களுக்கு எவ்வகைத் துன்பத்தினை உண்டாக்குமோ, அவ்வகைத் துன்பம் அருளில்லாத வேந்தன் நாட்டில் வாழும் மக்களுக்கு உண்டாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மழையின்மை உலகிற்கு எத்தகைய துன்பத்தைத் தருமோ அதுபோல அரசரின் அருள் இல்லாத தன்மை நாட்டு மக்களுக்குப் பெரும் துன்பத்தைத் தரும்.
|
|
Translation
|
|
As lack of rain to thirsty lands beneath,
Is lack of grace in kings to all that breathe.
|
|
Explanation
|
|
As is the world without rain, so live a people whose king is without kindness.
|
|
Transliteration
|
|
Thuliyinmai Gnaalaththirku Etratre Vendhan
Aliyinmai Vaazhum Uyirkku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|