|
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாய வழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள், சுற்றத்தார்கண்ணே உள - சுற்றத்தார்மாட்டே உள ஆவன. (சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப்படாமை விளக்கி நின்றது. பழைமை : பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின்,ஏகாரம் தேற்றத்தின்கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பொருளற்ற கண்ணும் பழைமையைக் கொண்டாடி விடாதொழுகுதல் சுற்றத்தார்மாட்டே யுளவாம்.
இஃது இல்லாக் காலத்தினும் விடாரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் அல்லது அதிகாரம் தொலைந்து வறியனானதின் விளைவாகத் தொடர்பு நீங்கிய விடத்தும் , அவனொடு தமக்கிருந்த பழையவுறவைச் சொல்லிப்பாராட்டும் இயல்புகள் ; சுற்றத்தார் கண்ணே உள - உறவினரிடத்திலேயே உள்ளன.
'பழைமை' பழைய இன உறவாட்டு ; ஆகுபெயர். நண்பரும் வறியாரும் நன்மை பெற்றிருப்பராதலின் ; இங்குப் பழைமையென்றது பழைய இனவுறவுநிகழ்ச்சிகளையே , உம்மை இறந்தது தழுவிய எச்சம்; சிறப்பன்று. ஏகாரம் பிரிநிலை; தேற்றமன்று. பற்றறாத போதுமட்டுமன்றிப் பற்றற்ற போதும் என்றும் , சுற்றத்தாரிடத்திலேயே என்றும் , பொருள்படுவதை நோக்கி யுணர்க.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப்
பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அடிக்கடி சந்திக்கின்ற) தொடர்பு விட்டுப்போனாலும் பழைய உறவுகளை மறந்துவிடாமல் பாராட்டிக்கொண்டிருக்கிற இயல்பு சுற்றத்தார்களிடத்தில்தான் உண்டு.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவன் செல்வமிழந்து வறியவனான காலத்திலும் அவனுடைய பழைமையை எடுத்துக் கொண்டாடுகின்ற இயல்புகள் சுற்றத்தாரிடம் இருப்பனவாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவர் தம் செல்வம் முழுவதையும் இழந்து வறுமையுற்ற போதும் தம் பழைய உறவை எண்ணி அன்பு பாராட்டுதல் சுற்றத்தார் இயல்பாகும்.
|
|
Translation
|
|
When wealth is fled, old kindness still to show,
Is kindly grace that only kinsmen know.
|
|
Explanation
|
|
Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).
|
|
Transliteration
|
|
Patratra Kannum Pazhaimaipaa Raattudhal
Sutraththaar Kanne Ula
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|