|
நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
குடிப்பிறந்து - உயர்ந்த குடியில் பிறந்து, குற்றத்தின் நீங்கி - குற்றங்களினின்று நீங்கி, வடுப்பரியும் நாண் உடையான்கட்டே தெளிவு - தமக்கு வடு வருங்கொல் என்று அஞ்சாநிற்கும் நாணுடையவன் கண்ணதே அரசனது தெளிவு. (குற்றங்களாவன: மேல் அரசனுக்குச் சொல்லிய பகை ஆறும், மடி, மறப்பு, பிழைப்பு என்ற இவை முதலாயவும் ஆம். நாண்: இழிதொழில்களில் மனம் செல்லாமை. இவை பெரும்பான்மையும் தக்கோர்வாய்க் கேட்டலாகிய ஆகம அளவையால் தெரிவன. இந்நான்கும் உடையவனையே தெளிக என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உயர்குடியிற் பிறந்து காமம் வெகுளி முதலான குற்றித்தினின்று நீங்கி, தனக்கு வரும் பழியை அறுக்கவல்ல நாணமுடையவன்கண்ணதே அரசனது தெளிவு.
இதுவும் உடன்பாடென்று கொள்ளப்படுமென்றவாறு
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
குடிப் பிறந்து - ஒழுக்கத்தால் உயர்ந்த குடும்பத்திற் பிறந்து ; குற்றத்தின் நீங்கி - நடுநிலையின்மை , விரைமதியின்மை அன்பின்மை , மடி , மறதி முதலியவற்றொடு ஐவகையும் அறுவகையுமான குற்றங்களினின்றும் நீங்கி , வடுப்பரியும் நாண் உடையான் கட்டே தெளிவு - தமக்குப் பழிவந்து விடுமோ என்று அஞ்சும் நாணுடையவ னிடத்ததே அரசனது தெளிவு.
குடிப்பிறந்தார் வடுப்பரிதலை,
"அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரு மொப்பர்மன் - திங்கள்
மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வ ரொருமா சுறின்."
(நாலடி . 151.)
என்பதாலறிக . நாண் இழிதொழில் பற்றிய நன்மக்கள் அருவருப்பு . "கருமத்தா னாணுத னாணு" (குறள். 1011 ) என்றமை காண்க . ஏகாரம் தேற்றம் . கண்ணது - கட்டு (கண் + து ) . 'குற்றத்தினீங்கி வடுப்பரியு நாண்' உண்மையுமின்மையும் நால்வகைத் தேர்விலும் வெளிப்பட்டுவிடும் . குடிப்பிறப்பு தக்கார் உரையாலும் உறவினராலும் அறியப்படும்.
|
|
கலைஞர் உரை:
|
|
குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும்
இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள
வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அவ்வளவையும் ஆராய்வது அனுபவத்தில் மிகவும் கடினமானதுதான். அதனால் குறைந்தபட்சமாக) நல்ல குடும்பத்தில் பிறந்தவனாகவும், இதுவரைக்கும் குற்றங்களில் சம்பந்தப்படாத வனாகவும், குற்றம் செய்ய அஞ்சுகிறவனாகவும் இருக்கிறவனிடத்தில் நம்பிக்கை வைக்கலாம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உயந்த குடியில் பிறந்து குற்றங்கள் இல்லாமல் 'நமக்குக் கெடுதி வருமோ' என்று அஞ்சி நாணுகின்றவனைத் தேர்ந்து அமைத்துக் கொள்ளுவதே தலைவனுக்குத் தெளிவாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நற்குடியிற் பிறந்தவராய், குற்றம் எதுவும் செய்யாத பண்பினராய், பழிகளுக்கஞ்சும் தன்மையராய் இயங்கும் ஒருவரையே தெளிந்து தேர்ந்து கொள்ளல் நன்று.
|
|
Translation
|
|
Of noble race, of faultless worth, of generous pride
That shrinks from shame or stain; in him may king confide.
|
|
Explanation
|
|
(The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).
|
|
Transliteration
|
|
Kutippirandhu Kutraththin Neengi Vatuppariyum
Naanutaiyaan Sutte Thelivu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|