Thirukural

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாதது இல்

தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒல்வது அறிவது அறிந்து - தமக்கியலும் வினையையும் அதற்கு அறிய வேணடுவதாய வலியையும் அறிந்து, அதன்கண் தங்கிச் செல்வார்க்கு - எப்பொழுதும் மன, மொழி, மெய்களை அதன்கண் வைத்துப் பகைமேல் செல்லும் அரசர்க்கு; செல்லாதது இல்- முடியாத பொருள் இல்லை. ('ஒல்வது' எனவே வினை வலி முதலாய மூன்றும் அடங்குதலின் ஈண்டு 'அறிவது' என்றது துணைவலியே ஆயிற்று. எல்லாப் பொருளும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் வலியின் பகுதியும், அஃது அறிந்து மேற்செல்வார் எய்தும் பயனும் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
தமக்கியலும் வினைக்கு அறிய வேண்டுவதாய திறம் இதுவென அறிந்து அதன் பின்பு அவ்வளவிலே நின்று ஒழுகுவராயின் அவர்க்கு இயலாதது இல்லை. இது வலியறிந்தாலும் அமைந்தொழுக வேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒல்வது அறிவது அறிந்து - தம்மாற் செய்தற்கியலும் வினையையும் அதன் தொடர்பாக அறியவேண்டிய தெல்லாவற்றையும் அறிந்து ; அதன்கண் தங்கிச் செல்வார்க்கு - அம்முயற்சியில் உறுதியாக மனத்தையூன்றிப் பகைமேற்செல்லும் அரசர்க்கு ; செல்லாதது இல் - முடியாதது ஒன்றும் இல்லை . 'ஒல்வது' எனவே நால்வகை வலியும் அடங்குதலின் , 'அறிவது' என்றது மேற்கொண்டு ஒற்றர் வாயிலாகப் பகைவர் நிலைமையைப் பற்றி அறியக்கூடிய புதுச்செய்திகளாகும் . 'செல்லாததில்' எனவே வெற்றி உறுதி என்பதாம் .
கலைஞர் உரை:
ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படி அளந்து) தம்மால் எவ்வளவு முடியும் என்பதை அறிந்துகொண்டு அந்த அளவோடு நின்று செய்கிறவருக்கு நடக்காத காரியம் ஒன்றுமில்லை.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தம்மால் முடியும் தொழிலையும், அதற்கு அறிய வேண்டிய வலிமையினையும் அறிந்து எப்போதும் அதனையே நினைவாகக் கொண்டு பகைமேல் செல்லும் அரசர்க்கு முடியாத பொருள் இல்லை.
தமிழ்க்குழவி உரை:
தன்னால் முடியும் என்கிற நம்பிக்கையில் செயலை நன்றே அறிந்த நிலையில் அதில் முழு ஈடு பாட்டுடன் செய்ய முனைவார்க்கு இயலாதது என்று யாதுமில்லை.
Translation
Who know what can be wrought, with knowledge of the means, on this, Their mind firm set, go forth, nought goes with them amiss.
Explanation
There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and apply themselves wholly to their object.
Transliteration
Olva Tharivadhu Arindhadhan Kandhangich Chelvaarkkuch Chellaadhadhu Il

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 472