Thirukural

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல்.

(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அழிவதூஉம் - வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும், ஆவதூஉம் - அழிந்தால் பின் ஆவதனையும், ஆகி வழி பயக்கும் ஊதியமும் - ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும், சூழ்ந்து செயல் - சீர் தூக்கி உறுவதாயின் செய்க. (உறுவதாவது - நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும் அது வளர்ந்து வருதல் . அழிவது இன்மையின், எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம்' என்றார். எனவே, அவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தும் பயன் உடைமை தெரிந்து செய்க என்பதாம்.)
மணக்குடவர் உரை:
வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும் அது செய்து முடித்தாலுளதாகும் பொருளுமாய்நின்று அப்பொருளினாற் பின்புண்டாய் வரும் பயனும் எண்ணிப் பின்பு வினைசெய்ய வேண்டும்.
தேவநேயப் பாவாணர் உரை:
அழிவதும்-வினைமேற்கொள்ளும் போது அன்று அதனால் அழிவதையும்; ஆவதும் -அழிந்தாற்பின் ஆவதையும்; ஆகி வழிபயக்கும் ஊதியமும் -வினை முடிந்தபின் தொடர்ந்து வரும் ஊதியத்தையும் ; சூழ்ந்து செயல் -ஒப்பு நோக்கி ஆராய்ந்து தக்கதாயின் செய்க, தகாததாயின் விட்டு விடுக. தக்கதாவது, அற்றைச் செலவினும் வரவுமிக்குப் பிற்றை வரவு முள்ளது; அல்லது அற்றை வரவு செலவொத்துப் பிற்றை வரவுள்ளது; அல்லது அற்றை வரவினுஞ் செலவு மிக்குப் பிற்றைப் பெரு வரவுள்ளது; அல்லது பிற்றை வரவின்றி அற்றைச் செலவினும்வரவு மிக்கிருப்பது. தகாததாவது, பிற்றை வரவின்றி அற்றை வரவு செலவொத்தோ வரவினுஞ் செலவுமிக்கோ இருப்பது; அல்லது அற்றை வரவினுஞ் செலவுமிக்குப் பிற்றைச் சிறுவரவுள்ளது. 'அழிவதூஉம்' 'ஆவதூஉம்' இன்னிசை யளபெடைகள்.
கலைஞர் உரை:
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஒரு வேலையைத் தொடங்கு முன்னால்) அதற்குச் செய்யவேண்டிய செலவுகளையும் அந்த வேலையினால் அடையக் கூடிய நன்மைகளையும் அந்த வேலை முடிந்தபின் அதன் வழியாகப் பின்னால் வரக்கூடிய பலாபலன்களையும் ஆராய்ந்து அறிந்து கொண்டு அதன் பிறகே அந்தக் காரியத்தில் இறங்க வேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தொழில் செய்யும்போது, அப்போது அதனால் வரும் அழிவினையும், பிறகு ஆவதனையும், ஆனபிறகு தரும் ஊதியத்தினையும் சீர்தூக்கிப் பார்த்துச் செய்தல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
ஒரு செயலைத் தொடங்கும்போது அதனால் ஏற்படும் இழப்புகள், நன்மைகள், பெறும் ஊதியம் ஆகியவற்றை ஆய்ந்து தெளிந்திடுதல் வேண்டும்.
Translation
Expenditure, return, and profit of the deed In time to come; weigh these- than to the act proceed.
Explanation
Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act.
Transliteration
Azhivadhooum Aavadhooum Aaki Vazhipayakkum Oodhiyamum Soozhndhu Seyal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 461