|
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அழிவதூஉம் - வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும், ஆவதூஉம் - அழிந்தால் பின் ஆவதனையும், ஆகி வழி பயக்கும் ஊதியமும் - ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும், சூழ்ந்து செயல் - சீர் தூக்கி உறுவதாயின் செய்க. (உறுவதாவது - நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும் அது வளர்ந்து வருதல் . அழிவது இன்மையின், எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம்' என்றார். எனவே, அவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தும் பயன் உடைமை தெரிந்து செய்க என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும் அது செய்து முடித்தாலுளதாகும் பொருளுமாய்நின்று அப்பொருளினாற் பின்புண்டாய் வரும் பயனும் எண்ணிப் பின்பு வினைசெய்ய வேண்டும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அழிவதும்-வினைமேற்கொள்ளும் போது அன்று அதனால் அழிவதையும்; ஆவதும் -அழிந்தாற்பின் ஆவதையும்; ஆகி வழிபயக்கும் ஊதியமும் -வினை முடிந்தபின் தொடர்ந்து வரும் ஊதியத்தையும் ; சூழ்ந்து செயல் -ஒப்பு நோக்கி ஆராய்ந்து தக்கதாயின் செய்க, தகாததாயின் விட்டு விடுக.
தக்கதாவது, அற்றைச் செலவினும் வரவுமிக்குப் பிற்றை வரவு முள்ளது; அல்லது அற்றை வரவு செலவொத்துப் பிற்றை வரவுள்ளது; அல்லது அற்றை வரவினுஞ் செலவு மிக்குப் பிற்றைப் பெரு வரவுள்ளது; அல்லது பிற்றை வரவின்றி அற்றைச் செலவினும்வரவு மிக்கிருப்பது. தகாததாவது, பிற்றை வரவின்றி அற்றை வரவு செலவொத்தோ வரவினுஞ் செலவுமிக்கோ இருப்பது; அல்லது அற்றை வரவினுஞ் செலவுமிக்குப் பிற்றைச் சிறுவரவுள்ளது. 'அழிவதூஉம்' 'ஆவதூஉம்' இன்னிசை யளபெடைகள்.
|
|
கலைஞர் உரை:
|
|
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று
விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஒரு வேலையைத் தொடங்கு முன்னால்) அதற்குச் செய்யவேண்டிய செலவுகளையும் அந்த வேலையினால் அடையக் கூடிய நன்மைகளையும் அந்த வேலை முடிந்தபின் அதன் வழியாகப் பின்னால் வரக்கூடிய பலாபலன்களையும் ஆராய்ந்து அறிந்து கொண்டு அதன் பிறகே அந்தக் காரியத்தில் இறங்க வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தொழில் செய்யும்போது, அப்போது அதனால் வரும் அழிவினையும், பிறகு ஆவதனையும், ஆனபிறகு தரும் ஊதியத்தினையும் சீர்தூக்கிப் பார்த்துச் செய்தல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒரு செயலைத் தொடங்கும்போது அதனால் ஏற்படும் இழப்புகள், நன்மைகள், பெறும் ஊதியம் ஆகியவற்றை ஆய்ந்து தெளிந்திடுதல் வேண்டும்.
|
|
Translation
|
|
Expenditure, return, and profit of the deed
In time to come; weigh these- than to the act proceed.
|
|
Explanation
|
|
Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act.
|
|
Transliteration
|
|
Azhivadhooum Aavadhooum Aaki Vazhipayakkum
Oodhiyamum Soozhndhu Seyal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|