Thirukural

செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி.

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே. ( 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.)
மணக்குடவர் உரை:
ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது பழியே. மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒருவற்குச் செயற்பாலது அறனே-ஒருவன் என்றுஞ் செய்யத்தக்கது நல்வினையே; உயற்பாலது பழியே-செய்யாது விடத்தக்கது தீவினையே. 'ஓரும்' ஈரிடத்தும் அசைநிலை. ஆயினும், முதற்காலத்தில் 'ஆராய்ந்தறியும்' என்று பொருள்படும் ஏவற்பன்மை அல்லது பெயரெச்சமாகவே அது வழங்கியிருத்தல் வேண்டும். பிரிநிலையேகாரம் பின்னுங் கூட்டப்பட்டது.
கலைஞர் உரை:
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆகையினால்) ஒருவன் தன் வாழ்நாளில் செய்ய வேண்டுமென்பது அறச் செயல் தான். செய்யாமல் விலக்கிவிட வேண்டும் என்பது பழி, பாவச் செயல்களேயாம்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவர்க்குச் செய்யும் தன்மையுடையன அறச்செயல்களே ஆகும், நீக்கவேண்டிய தன்மையுடையன தீயவைகளான செயல்களேயாகும்.
தமிழ்க்குழவி உரை:
ஒருவன் தன்வாழ்நாளில் ஓர்ந்து செய்யத்தக்கது அறன். தவிர்க்க வேண்டியவை பழியை நல்கும் தீய செயல்கள்.
Translation
'Virtue' sums the things that should be done; 'Vice' sums the things that man should shun.
Explanation
That is virtue which each ought to do, and that is vice which each should shun.
Transliteration
Seyarpaala Thorum Arane Oruvarku Uyarpaala Thorum Pazhi

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 40