Thirukural

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனான் பவர்க்கு.

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நிலன் ஆள்பவற்கு - நிலத்தினை ஆளும் திருவுடையாற்கு; தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும் நீங்கா - அக்காரியங்களில் விரைவுடைமையும், அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடமையும், ஆண்மை உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா. (கல்வியது கூறுபாடு முன்னர்க் கூறப்படும். ஆண்மையாவது, ஒன்றனையும் பாராது கடிதில் செய்வது ஆகலின்,அஃது ஈண்டு உபசார வழக்கால் 'துணிவு' எனப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவற்றுள் கல்வி ஆறு அங்கத்திற்கும் உரித்து. ஏனைய வினைக்கு உரிய. 'நீங்கா' என்பதற்குமேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க)
மணக்குடவர் உரை:
மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியை யாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.
தேவநேயப் பாவாணர் உரை:
நிலன் ஆள்பவற்கு - நாட்டையாளும் அரசனுக்கு; தூங்காமை கல்வி துணிவுடைமை இம் மூன்றும் நீங்கா - அரசக்கருமங்களை விரைந்து செய்யுந்தன்மையும் அவற்றை யறிதற்கேற்ற கல்வியறிவும் அவற்றைச் செய்து முடிக்கும் மனத்திட்பமும் என்றும் நீங்காதிருத்தல் வேண்டும். கல்வியறிவினால் வினை வெற்றியாக முடியும் வகை தீர்மானிக்கும் திறமும், துணிவினால் தீர்மானித்ததை நெஞ்சுரத்துடன் நிறைவேற்றுவதும், தூங்காமையால் உரியகாலத்தில் தொடங்கி முடிப்பதும், கூடும் என்பதாம். இவற்றுட் கல்வி ஏழுறுப்புக்களையும் நோக்கியது. ஏனையிரண்டும் வினைக்குரியன. உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.
கலைஞர் உரை:
காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
அரச காரியங்களில் அயர்ந்துவிடாமல் விழிப்பாக இருப்பது, அப்போதைக்கப்போது அறிய வேண்டியவற்றைக் கற்றுக் கொள்வது, உடனுக்குடன் ஆலோசனை நடத்திக் காரியங்களை நிச்சயிப்பது ஆகிய மூன்று குணங்களும் நாடாளும் தலைவ னிடத்தில் எந்த நேரத்திலும் நீங்காதிருக்க வேண்டும்,
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பூமியை ஆட்சி புரியும் திருஉடையார்க்கு, செயல்களில் விரைவு உடைமையும், தக்க கல்வியும், ஆண்மையுடைமையும் ஆகிய இம்மூன்று குணங்களும் எப்போதும் நீங்காதிருப்பனவாகும்.
தமிழ்க்குழவி உரை:
காலம் தாழ்த்தாமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்று பண்புகளும் மன்னர்க்கு நீங்காது இருத்தல் வேண்டும்.
Translation
A sleepless promptitude, knowledge, decision strong: These three for aye to rulers of the land belong.
Explanation
These three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country.
Transliteration
Thoongaamai Kalvi Thunivutaimai Immoondrum Neengaa Nilanaan Pavarkku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 383