Thirukural

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு.

யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு - இருவகைப் பற்றினையும் இறுகப்பற்றி விடாதாரை, இடும்பைகள் பற்றி விடாஅ - பிறவித் துன்பங்கள் இறுகப்பற்றி விடா. (இறுகப் பற்றுதல் - காதல் கூர்தல், விடாதவர்க்கு என்பது வேற்றுமை மயக்கம். இதனான், இவை விடாதவர்க்கு வீடு இல்லை என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பொருள்களைப் பற்றி விடாதவரைத் துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும். இது பொருள்களைத் துறவாக்கால் வினை கெடாதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பற்றினைப் பற்றி விடாதவர்க்கு -இருவகைப் பற்றையும் இறுகப்பற்றி விடாதவரை; இடும்பைகள் பற்றி விடா - பிறவித் துன்பங்களும் இறுகப் பற்றி விடுவதில்லை. 'விடாஅ' ஈரிடத்தும் இசைநிறையளபெடை. 'விடாஅ தவர்க்கு வேற்றுமை மயக்கம். பற்று விடாதார்க்கு வீடில்லை யென்பதாம்.
கலைஞர் உரை:
பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.
சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஏனெனில் 'யான்' 'எனது' என்ற) பற்றுக்களை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறவர்களைப் பிறவித் துன்பங்களும் விடாமல் பற்றிக்கொண்டே இருக்கும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பற்றுகளை இறுகப் பிடித்துக் கொண்டு விடாதவர்களைப் பிறவித் துன்பங்கள் இறுகப் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கும்.
தமிழ்க்குழவி உரை:
யான், எனது என்னும் பற்றுகளிலிருந்து விடுபடாதவர்களை உலகத்துயர்களும், பிறவித்துன்பமும் பற்றியே நிற்கும்.
Translation
Who cling to things that cling and eager clasp, Griefs cling to them with unrelaxing grasp.
Explanation
Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.
Transliteration
Patri Vitaaa Itumpaikal Patrinaip Patri Vitaaa Thavarkku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 347