Thirukural

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு.

தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தவத்திற்கு உரு-தவத்தின் வடிவு; உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே - உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று (மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், 'அற்றே,' எனத் தேற்றேகாரம் கொடுத்தார். 'தவத்திற்கு உரு அற்று' என்பது, 'யானையது கோடு கூரிது' 'என்பதனை,' யானைக்குக் கோடு கூரிது, என்றாற்போல ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம் இதனால் தவத்தினது இலக்கணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே தவத்திற்கு வடிவமாம்.
தேவநேயப் பாவாணர் உரை:
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே - இயற்கையாகவுஞ் செயற்கையாகவும் தமக்கு நேருந் துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளுதலும் , பிறவுயிர்கட்குத் துன்பஞ் செய்யாமையுமாகிய அவ்வளவே; தவத்திற்கு உரு - தவத்தின் வடிவாம். இத்தவ விலக்கணம் தொகுத்துக் கூறல் என்னும் உத்தி பற்றியது. ஏகாரம் தேற்றம்.
கலைஞர் உரை:
எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் "தவம்" என்று கூறப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(தவம் செய்வதற்கு இன்றியமையாத குணம் என்ன வென்றால்) தனக்கு வந்த துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, தான் பிற உயிருக்குத் துன்பம் செய்யாமலிருப்பது ஆகிய அவ்வளவேதான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தவத்திற்கு வடிவம் என்னவென்றால், தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுவதும், தாம் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருப்பதுவுமேயாகும்.
தமிழ்க்குழவி உரை:
தனக்கு வந்த துன்பத்தைத் தாங்கிக் கொள்வதும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருத்தலுமே தவத்திற்குரிய அடையாளம் ஆகும்.
Translation
To bear due penitential pains, while no offence He causes others, is the type of 'penitence
Explanation
The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others.
Transliteration
Utranoi Nondral Uyirkkurukan Seyyaamai Atre Thavaththir Kuru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 261