|
பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பிறன் கேடு மறந்தும் சூழற்க - ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக, சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும். ('கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும்.
இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பிறன்கேடு மறந்தும் சூழற்க-ஒருவன் பிறனுக்குக் கேடு செய்யும் வினையை மறந்தும் எண்ணாதிருக்க; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்-எவனேனும் எண்ணின், எண்ணினவனுக்குக் கேட்டை அறத்தெய்வமே செய்ய எண்ணும்.
தப்பாது பழிக்குப் பழிவாங்க வலிமை மிக்க அறத் தெய்வம் உடனிருத்தலால், ஒருவனுக்குத் தீங்கை எண்ணுதலும் ஆகாது என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி
நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு
விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
மறந்தாற் போலக்கூடப் பிறனொருவனுக்குக் கேடு உண்டாக்க நினைக்கக் கூடாது. நினைத்தால் அப்போதே தர்ம தேவதை அப்படி நினைக்கிறவனுக்குக் கேடுண்டாக்க நினைத்து விடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவன் மறந்தேனும் பிறனுக்குத் தீமைதரும் செயல்களைச் செய்யாதிருப்பானாக; அப்படி நினைப்பானாகில் அவனுக்குத் தீங்கினை அறம் நினைக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மறந்து கூட பிறருக்கு கெடுதல் செய்ய எண்ணலாகாது. செய்ய நினைப்பின் நினைத்தார்க்கு அறமே தண்டனை வழங்கும்.
|
|
Translation
|
|
Though good thy soul forget, plot not thy neighbour's fall,
Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall.
|
|
Explanation
|
|
Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.
|
|
Transliteration
|
|
Marandhum Piranketu Soozharka Soozhin
Aranjoozham Soozhndhavan Ketu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|