|
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல் - ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை. (பிறன் பொருள்: பிறன் உடைமை, அறம், பொருள் என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் 'பரகீயம்' என்று கூறுவராகலின், 'அறம் பொருள் கண்டார் கண் இல்' என்றார்.எனவே அப்பேதைமை உடையார் மாட்டு அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - வேறொருவன் உடமையாகவுள்ளவளைக் காதலித் தொழுகும் மடைமை ; ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல் - நிலவுலகத்தில் அறநூலையும் , பொருள்நூலையுங் கற்றுத் தெளிந்தவரிடம் இல்லை .
பிறன் மனைவியைக் காதலிப்பவர் , இம்மைக்குரியனவும் மாந்தனுக்கு உறுதிபயப்பனவுமான அறம் பொருளின்பம் என்னும் மூன்றனுள் இன்பம் ஒன்றையே கருதியவர் என்பதை உணர்த்தற்கு , ' அறம் பொருள் கண்டார்கணில் ' என்றார்.
பொருள்நூலை அறியாததினால் பிறன் மனைவி பிறன் பொருளென்பதும் , அறநூலை யறிதாததினால் பிறன் பொருளை நுகர்தல் தீவினை யென்பதும் , தெரியாதுபோயின . அறம் பொருள் என்பன கருமிய ( காரிய) வாகுபெயர் . எண்ணும்மை தொக்கது . பூமி என்னும் வடசொல் வழங்கவே , ஞாலம் என்னும் தென்சொல் வழக்கற்றது . பேதைமை என்பது நல்லதை விட்டுவிட்டுத் தீயதைத் தெரிந்துகொள்ளுந் தன்மை .
|
|
கலைஞர் உரை:
|
|
பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில்
அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம்
இல்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
இன்னொருவனுக்கு உரிமையான அவனுடைய மனைவியின் மேல் காம் இச்சைகொண்டு அலைகிற மூடத்தனம் இல்லறத்தின் அர்த்தத்தை அறிந்தவர்களிடம் இருக்காது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பிறனுக்குப் பொருளாம் தன்மையுடைய இல்லாளைக் காதலித்து ஒழுகும் அறியாமைக் குணம் உலகில் அறம் பொருள் நூல்களை ஆராய்ந்து கண்டவரிடத்தில் இல்லையாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அறனும் பொருளும் அறிந்து நடப்பவர்கள் என்றும் பிறன் மனைவியை விழைகின்ற அறியாமைச் சேற்றுள் விழுவதில்லை.
|
|
Translation
|
|
Who laws of virtue and possession's rights have known,
Indulge no foolish love of her by right another's own.
|
|
Explanation
|
|
The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.
|
|
Transliteration
|
|
Piranporulaal Pettozhukum Pedhaimai Gnaalaththu
Aramporul Kantaarkan Il
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|