Thirukural

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்.

நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும். - ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும். ('நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும் 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம், ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்: தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும். தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தருமென்றவாறு. என்றும்- இருமையின்கண்ணுமென்றவாறு.
தேவநேயப் பாவாணர் உரை:
நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் - ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந்தரும் ; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீயவொழுக்கம் எக்காலும் துன்பமே தரும் . மறுமையில் விளையும் இன்பத்திற்கு இம்மையில் ஒழுகும் நல்லொழுக்கம் வித்துப்போன்றிருத்தலால் , 'வித்தாகும்' என்றார் . தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் என்பதால் , நல்லொழுக்கம் இம்மையிலும் இன்பந்தருதல் பெற்றாம் .
கலைஞர் உரை:
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஒழுக்கத்தால் மேன்மை அடைவது மட்டுமன்றிப் பின்னால் பல நன்மைகளும் உண்டாகும்.) நல்ல நடத்தையினால் உடனே நன்மைகள் கிடைக்காவிட்டாலும் பின்னால் நன்மைகள் முளைப்பதற்கு அது விதை தெளிப்பதாகும். ஆனால் தீய ஒழுக்கத்தால் உடனேயும் துன்பமுண்டாகும்; பின்னாலும் துன்பம் வரும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நல்லாருக்கும் என்பது நன்மையான அறத்திற்கு விதைபோன்ற காரணமாகும். தீய ஒழுக்கமானது எப்போதும் துன்பத்தினைத் தருவதாகும்.
தமிழ்க்குழவி உரை:
நல்லொழுக்கம் என்பது வாழ்வின் நன்மைகளுக் கெல்லாம் விதையைப் போன்றது. தீயொழுக்கமோ, எப்போதும் துன்பத்தையே தரும்.
Translation
'Decorum true' observed a seed of good will be; 'Decorum's breach' will sorrow yield eternally.
Explanation
Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.
Transliteration
Nandrikku Viththaakum Nallozhukkam Theeyozhukkam Endrum Itumpai Tharum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 138