Thirukural

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்என்னினும் தான்விதுப் புற்று.

கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) கண்ணின் துனித்தே - காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி; புல்லுதல் என்னினும் தான் விதுப்பு உற்றுக் கலங்கினாள் - புல்லுதலை என்னினும் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யான் இத்தன்மையேனாகவும் விதுப்பின்றி ஊடி நிற்கின்ற இவள் அவளல்லள். (கண் மாத்திரத்தான் ஊடல் - சொல் நிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையே யாதல். 'அவளாயின் இங்ஙனம் ஊடற்கண் நீடாள்' என்பது பயன்.)
மணக்குடவர் உரை:
கண்ணாலே புலந்தும் அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற்றாள், புணர்தலை என்னினும் மிகத் தான் விரைதலானே. இது தலமகளூடற் குறிப்புப் புணர்வுவேட்டல் கண்டு தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.
தேவநேயப் பாவாணர் உரை:
கண்ணின் துனித்தே-முன்னொருநாள் தழுவல் விதுப்பினாற் சென்ற என்னொடு கண்ணளவாக மட்டும் காதலியூடி; என்னினும் தான் புல்லுதல் விதுப்புற்றுக் கலங்கினாள்-என்னினும தான் தழுவல் விதுப்புற்றதினால் அக் கண்ணளவூடலையும் மறந்து அப்பொழுதே கூடிவிட்டாள் . அதனால் , யான் இத்தன்மையேனாய் ஏங்கிநிற்கவும் விதுப்பின்றி யூடிநிற்கின்ற இவள் அவளல்லள். கண்ணளவாக வூடுதல் சொல் நிகழ்ச்சியின்றிக் கண்சிவத்தல்.அவளாயின் ஊடற்கண் நீடாமை பயன் . ஏகாரம் பிரிநிலை.
கலைஞர் உரை:
விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.
சாலமன் பாப்பையா உரை:
தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதைக் கேட்ட காதலி வருந்த, காதலன் தனக்குள் சொல்லுகிறான்:) நான் சொல்லுவதைக் கேட்டு இவள் வருந்துகிறாள். இயல்பாகப் புணர்ச்சிக்குத் துடிப்புக் காட்டவேண்டிய ஆணாகிய நான் பொறுத்திருக்க, பொறுக்கும் இயல்புடைய பெண்ணாகிய இவள் என்னைவிட அவசரப்படுகிறாளே! அவ்வளவு காம வேதனை அடைந்திருக்கிறாள் போலும்!
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
காதலி முன்னொரு முறை கண்ணினால் மட்டும் ஊடுதல் செய்து தழுவுதலில் என்னைவிட விருப்பங்கொண்டு அந்த ஊடலினையும் மறந்து அப்போதே கூடிவிட்டாள்.
தமிழ்க்குழவி உரை:
கண்களால் வருந்தி ஊடலுடன் நின்றாள் தலைவி. ஆனால் கூடலின் போதோ என்னினும் மிக விரைந்து இறுகத் தழுவுகிறாள்.
Translation
Her eye, as I drew nigh one day, with anger shone: By love o'erpowered, her tenderness surpassed my own.
Explanation
She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.
Transliteration
Kannin Thuniththe Kalanginaal Pulludhal Enninum Thaanvidhup Putru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1290