Thirukural

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்.

பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பிறவும் தமபோல் பேணிச் செயின் -பிறர் பொருளையும் தம்பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகம் செய்வார்க்கு வாணிகம் - வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய் வாணிகம் ஆம். (பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின்; எனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின்.)
மணக்குடவர் உரை:
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம், பிறர் பொருளையுந் தமது பொருள்போலப் பேணிச் சோர்வுபடாமற் செய்வாராயின். வாணிகம் - இலாபம்.
தேவநேயப் பாவாணர் உரை:
பிறவும் தம்போல் பேணிச் செயின்-பிறர் பொருளையுந் தம் பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம்-வாணிகஞ் செய்வார்க்கு நடுநிலையான நல்வாணிகமாம். "கொடுமேழி நசையுழவர் நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு மொப்ப நாடிக் கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும்" (பட்டினப். 205-211) வாணிகம் கொள்வினையையும் விற்பனையையும் ஒப்பக் கருதுவதனாலும், பொய்க்குங் கொள்ளைக்கும் இடந்தராமையாலும், மொத்த வணிகர் சில்லறை வணிகர் கொள்வோர் ஆகிய முத்திறத்தார்க்கும் தீதுங்கேடுமில்லா நல்வாணிகமாம்.
கலைஞர் உரை:
பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பிறருடைய பண்டங்களையும் தம்முடைய பண்டங்களைப் போல் நிறுப்பதுதான் வியாபாரிகளின் சிறப்பு. அதுபோல் பிறருடைய வழக்கையும் தம்முடைய வழக்காகச் சீர்தூக்கிச் செய்வதுதான் நடுவுநிலைமையின் சிறப்பு.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பிறர் பொருளையும், தம்முடைய பொருளைக் காப்பது போலக் காத்து வாணிபம் செய்தால், அதுவே வாணிபம் செய்பவர்களுக்கு நல்ல வாணிபம் ஆகும்.
தமிழ்க்குழவி உரை:
வாணிகம் செய்வார் பிறர்பொருளையும் தம் பொருள் போல் கருதி நடுவு நிலைமை பேணி, பிறழாது ஒழுகல் வேண்டும்.
Translation
As thriving trader is the trader known, Who guards another's interests as his own.
Explanation
The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.
Transliteration
Vaanikam Seyvaarkku Vaanikam Penip Piravum Thamapol Seyin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 120