Thirukural

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டுஇசையும் இனிய செவிக்கு.

யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) நசைஇயார் நல்கார் எனினும் - என்னால் நச்சப்பட்ட காதலர் என்மாட்டு அன்பிலரேயாயினும்; அவர்மாட்டு இசையும் செவிக்கு இனிய - அவர் திறத்து யாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு இனியவாம்.(இழிவு சிறப்பு உம்மை, 'அவர் வாரார் என்னுஞ் சொல்லாயினும் அமையும்' என்பதுபட நின்றது. 'அதுவும் பெற்றிலேன்'என்பதாம்.)
மணக்குடவர் உரை:
எம்மால் காதலிக்கப்பட்டார் எமக்கு அருளாராயினும் அவர் பக்கத்தனவாகிய சொற்களும் எங்கள் செவிக்கு இனியவாம்.
தேவநேயப் பாவாணர் உரை:
நசைஇயார் நல்கார் எனினும்-என்னால் விரும்பப்பட்ட காதலர் என்பால் அன்பில்லாதவரே யாயினும்; அவர் மாட்டு இசையும் செவிக்கு இனிய-அவரிடத்தினின்று வரும் எத்தகைச் செய்திகளும் என் செவிக்கு இன்பந்தருவனவாம். இழிவு சிறப்பும்மை, அவர் அண்மையில் வருகின்றிலர் என்னும் செய்தியாயினும் என்பது படநின்றது, அதுவும் பெற்றிலேன் என்பது கருத்து. 'ந சை இ' சொல்லிசையளபெடை. 'இசை' ஆகுபெயர்.
கலைஞர் உரை:
என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
நான் காதலிக்கிற என் கணவர் (தாமாக ஒரு சேதியனுப்பி) உதவாவிட்டாலும் அவரைப்பற்றி வேறு யாராயினும் ஒரு சேம வார்த்தை சொன்னாலும், அது எனக்கு ஆறுதல் அளிக்குமே.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
என்னால் விரும்பிக் காதலிக்கப்பட்ட காதலர் என்னிடம் அன்பில்லாதவரேயானாலும், அவரிடமிருந்து வருகின்ற எந்த ஒருசொல்லும் எனது செவிக்கு இனிமை தருவதாகும்.
தமிழ்க்குழவி உரை:
நான் விரும்பும் காதலர் என்பால் அன்பு பாராட்டாத சூழலிலும் அவர் பற்றிய பெருமையைப் பிறர் பேசக் கேட்பது இனிமையானது.
Translation
Though he my heart desires no grace accords to me, Yet every accent of his voice is melody.
Explanation
Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears.
Transliteration
Nasaiiyaar Nalkaar Eninum Avarmaattu Isaiyum Iniya Sevikku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1199