|
அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை என்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது.) எம் காதலர் உவக்காண் செல்வார் - பண்டும் நம் காதலர் உங்கே செல்வாராக; என் மேனி பசப்பு ஊர்வது இவக்காண- என் மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ? அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ? ('உவக்காண்', 'இவக்காண்' என்பன ஒட்டி நின்ற இடைச்சொற்கள், தேய அண்மையாற் கால அண்மை கருதப்பட்டது. 'அவர் செலவும் பசப்பினது வரவும் பகல் இரவுகளின் செலவும் வரவும் போல்வது அறிந்து வைத்து அறியாதாய்போல நீ சொல்லுகின்றது என்ன'? என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
எங்காதலராகச் செல்கின்றாரை உங்கே பாராய்; என்மேனி மேலே பசப்புப் பரவுதலை இங்கே பாராய். இஃது அவர் பிரிந்தது இப்பொழுதாயிருக்கப் பசலை பரவாநின்றது. அவர் வருமளவும் யாங்ஙனமாற்றுதும் என்று தலைமகள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(காதலர் பிரிந்தணித்தாயிருக்கவுங் ஆற்றுகின்றிலை யென்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது.) எம் காதலர் உவக்காண் செல்வார் - முன்புறம் காதலர் உதோ உந்த இடத்திற்குத்தான் செல்வார்; இவக்காண் என் மேனி பசுப்பு ஊர்வது-அதற்குள் இங்கே என் உடம்பெல்லாம் பசலை படர்ந்துவிடும். இங்ஙனம் ஒரு சில அடித்தொலைவே நம் காதலர் நடந்து செல்லினும், அடுத்தது காட்டும் பளிங்குபோலப் பளிச்சென்று பசலை படரும் என் மேனி. அவர் பல நாள்வழி அல்லது நாழிகை வழித் தொலைவிலேயே இருப்பினும், ஆற்றியிருக்குமோ என்றவாறாம். ‘உவ’, ‘இவ’ சுட்டிடைச் சொற்கள். காண் முன்னிலையசை, ‘உவ’ என்றது ஒரு சில அடித்தொலைவேயுள்ள முன்னிலையிடத்தை, இம்முன்மைச் சுட்டு இற்றைத் தமிழகத்தில் வழக்கிறந்தது.
|
|
கலைஞர் உரை:
|
|
என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
என் காதலர் சென்றிருப்பது எங்கோ வேறிடத்தில்; என் மேனி பசந்து போனதோ இங்கே என்னிடத்தில். இது என்ன விந்தை!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அந்தக் காலத்தில் எமது காதலர் பிரிந்து சென்றார். என்மேனி பசப்பு நிறம் அடைவது இங்கேயன்றோ?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
இதோபார், இப்பொழுதுதான் என் காதலர் பிரிந்து செல்கின்றார். அதற்குள்ளாக என்மேனியில் பசலைநோய் விரைந்து படர்கிறதே.
|
|
Translation
|
|
My lover there went forth to roam;
This pallor of my frame usurps his place at home.
|
|
Explanation
|
|
Just as my lover departed then, did not sallowness spread here on my person ?.
|
|
Transliteration
|
|
Uvakkaanem Kaadhalar Selvaar Ivakkaanen
Meni Pasappoor Vadhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|