|
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன, நீ ஆற்றல் வேண்டும், என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட - இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் எமக்குக் காதலரைக் காட்டலானன்றோ; கண் தாம் கலுழ்வது எவன் கொல் - அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி? ('காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது'? என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங்காட்டுதலானே யன்றே? பின்னர் அக்கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி? இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(நின் கண்கள் கலங்கித் தம் அழ நீ அழுதல் கூடாதென்ற தோழிக்குச் சொல்லியது) தாம்காட்ட தண்டாநோய் யாம் கண்டது-தாம் அன்று எம் காதலரை எமக்கு வலியக் காட்டினதினாலன்றோ இத் தணியா நோயை யாம் அடைந்து; கண் தாம் கலுழ்வது எவன்கொல்-அங்ஙனமிருக்கவும், இன்று தமக்கு அவரைக் காட்டச் சொல்லி என் கண்கள் என்னை வேண்டி யழுவது என்ன கருத்தொடு? எமக்குத் தெரியவில்லையே! இன்று அன்றுபோல் தாமே காட்டுவதல்லது யாம் காட்டுவது எங்ஙனம் என்பதாம். 'காட்ட' என்பதற்குரிய செயப்படுபொருள்வருவிக்கப்பட்டது. 'கொல்' ஐயம். 'ஓ' அசைநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
எனக்கு இந்த ஓயாத காம வேதனை உண்டானது என்னுடைய கண்கள் அவரை எனக்குக் காட்டி ஆசைகொள்ளச் செய்ததால்தான். அப்படியிருக்க, எனக்கு இந்த வேதனையை உண்டாக்கி வைத்துவிட்டு இந்தக் கண்கள் தாம் அழுகின்றனவே, என்ன விந்தை!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இக்கண்கள் காதலரை எமக்குக் காட்டியதாலன்றோ இத்தணியா நோய் உண்டாயிற்று. அவ்வாறு செய்த கண்கள் இன்று அத்தலைவரை எம்மைக் காட்டச் சொல்லி அழுவது என் கருதி?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தீராத இக்காதல் நோய், கண்கள் காதலரைக் காட்டியதால் தானே தோன்றின பிறகேன் இன்றவை கண்ணீர் வடித்து கலங்குகின்றன?
|
|
Translation
|
|
They showed me him, and then my endless pain
I saw: why then should weeping eyes complain?.
|
|
Explanation
|
|
As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).
|
|
Transliteration
|
|
Kandhaam Kaluzhva Thevankolo Thantaanoi
Thaamkaatta Yaamkan Tadhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|