Thirukural

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குஊற்றுநீர் போல மிகும்.

இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது என்ற தோழிக்குச் சொல்லிது.) நோயை யான் மறைப்பேன் - இந்நோயைப் பிறரறிதல் நாணி யான் மறையா நின்றேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகும் - நிற்பவும், இஃது அந்நாண்வரை நில்லாது நீர் வேண்டும் என்று இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுமாறு போல மிகாநின்றது. ('அம்மறைத்தலால் பயன் என்'? என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.இஃதோ செல்வர்க் கொத்தனென் யான்' என்புழிப் போல ஈண்டுச் சுட்டுப் பெயர் ஈறு திரிந்து நின்றது. 'இஃதோர் நோயை'என்று பாடம் ஓதுவாரும் உளர். அது பாடமன்மை அறிக. 'இனி அதற்கடுத்தது நீ செயல் வேண்டும்' என்பதாம்.]
மணக்குடவர் உரை:
இந்நோயை யான் மறைப்பேன்; மறைப்பவும் இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகாநின்றது. தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுத்தல் தகாதென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்குந் தகாதென்ற தோழிக்குச் சொல்லியது.) நோயை யான் மறைப்பேன் - இக்காம நோயைப் பிறர் அறியாவாறு யான் மறைப்பேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும் - ஆயின் , இதுவோ நான் மறைக்க மறைக்க என் நாண்வரை நில்லாது இறைப்பவர் இறைக்க இறைக்க வூறும் ஊற்று நீர்போல மிகுந்து வெளிப்படும். இனி அதற்குத் தக்கது நீ செய்தல் வேண்டும் என்பதாம். 'இஃதோ' என்பது சுட்டுப்பெயர் ஈது திரிந்தது அன்று. மறைத்து என்ன பயன் என்பது பட நின்றமையின் 'மன்' ஒழியிசை. 'இஃதோர் நோயை' என்னும் பாடம் சரியானதன்று.
கலைஞர் உரை:
இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்.
சாலமன் பாப்பையா உரை:
என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(காதலி சொல்லுவது:) என் காம நோயை நான் அடக்கி அடக்கிப் பார்க்கிறேன். ஆனால் அதுவோ இறைக்க இறைக்க வற்றாத நீருற்றுப் போல அடக்க அடக்க அதிகப்படுகிறது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இந்நோயினைப் பிறர் அறியாமல் இருக்கும்பொருட்டு நான் மறைக்க முயல்கிறேன். ஆனால் இந்த நோய் இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுந்து வருவதுபோல மிகுந்து வருகின்றது.
தமிழ்க்குழவி உரை:
இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்று நீர்போல என் காதல் நோயும் பெருகி வளர்கிறது. பிறருக்குத் தெரியாமல் இதனை மறைக்க முடியவில்லையே.
Translation
I would my pain conceal, but see! it surging swells, As streams to those that draw from ever-springing wells.
Explanation
I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.
Transliteration
Maraippenman Yaaniqdho Noyai Iraippavarkku Ootruneer Pola Mikum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1161