Thirukural

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடுநல்லாண்மை என்னும் புணை.

நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(நாணும் நல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப் புணையாகலின்,அதனால் அவை நீங்குவன அல்ல என்றாட்குச் சொல்லியது) நாணொடு நல்லாண்மை என்னும் புணை - யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் ஆகிய புணைகளை; காமக்கடும் புனல் உய்க்குமே - என்னிற பிரித்துக் காமமாகிய கடிய புனல் கொண்டு போகாநின்றது. (அது செய்யமாட்டாத ஏனைப் புனலின் நீக்குதற்கு, 'கடும்புனல்' என்றான். 'இப்புனற்கு அவை புணையாகா; அதனான் அவை நீங்கும்', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையுமாகிய புணைகளை என்னிற் பிரித்துக் காமமாகிய கடியபுனல் கொண்டுபோகா நின்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
( நாணும் நல்லாண்மையுங் காமவெள்ளத்திற்குப் புணையாகவின் , அதனால் அவை நீங்குவனவல்ல என்ற தோழிக்குத் தலை மகன் சொல்லியது . ) நாணொடு நல் ஆண்மை என்னும் புணை - நான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையுமாகிய புணைகளை ; காமக் கடும்புனல் உய்க்குமே - காமமாகிய பெரு வெள்ளம் அடித்துக்கொண்டு போகின்றதே ! நான் என்செய்வேன் !. புணையென்றது மிதவையும் கட்டுமரமும் பரிசலுந் தெப்பமும் போண்ற கடத்தக் கருவிகளை . அவற்றை என்னோடு அடித்துக்கொண்டு போகுமளவு வெள்ளம் பெருக்கும் வேகமுங் கொண்ட தென்பது தோன்றக் ' கடும்புனல் ' என்றாள் . ஏகாரம் இரங்கற் பொருட்டு .
கலைஞர் உரை:
காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.
சாலமன் பாப்பையா உரை:
ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
வெட்கம், நல்லாண்மை என்ற தெப்பங்களைக் கொண்டு காம ஆசை என்ற வேகமான ஆற்று வெள்ளம் கடந்து கரையேற முடியுமா!
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
காமத்தினைக்கடப்பதற்காக நான் கொண்டிருந்த நாணம், நல்லாண்மையாகிய புணைகளை என்னிடமிருந்து பிரித்துக்கொண்டு காமமாகிய கடுமையான புனல்கொண்டுபோய் விட்டது.
தமிழ்க்குழவி உரை:
நாணம், வீரம் ஆகிய எம் பண்புகளாம் படகுகளை காதல் என்னும் பெருவெள்ளம் எங்கேயோ அடித்துச் செல்கின்றது
Translation
Love's rushing tide will sweep away the raft Of seemly manliness and shame combined.
Explanation
The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust.
Transliteration
Kaamak Katumpunal Uykkum Naanotu Nallaanmai Ennum Punai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1134